Thursday, May 10, 2018

நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை!

தமிழகத்தின் தற்போதைய பிரச்சினை நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வுதான். அதைப்பற்றி என்னுடைய சிறு பார்வை. என்னுடைய சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். 

2006 வரை இந்த நுழைவுத்தேர்வு இருந்தது. அப்போதைய மாநில அரசின் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான நுழைவுத்தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது, இப்படித்தான் இருக்கும். 

சனி காலை - தாவரவியல் மற்றும் விலங்கியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
சனி மதியம் - இயற்பியல் மற்றும் வேதியியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
ஞாயிறு காலை - கணிதம் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 

மருத்துவம் படிக்க, முதலிரண்டு தேர்வுகளும், பொறியியல் படிக்க கடைசி இரண்டு தேர்வுகளும் எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு 'சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறை (4 பதில்களில் சரியான விடையை தேர்ந்துதெடுப்பது). இந்த கேள்விகள் அனைத்தும் மாநில பாட திட்டத்தில் இருந்தே கேட்கப்படும். மொத்தம் 4 வகையில் கேள்வித்தாள்கள் இருக்கும், வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். மொத்த கேள்விகள் ஒன்றுதான், ஆனால், வரிசை மாறி இருக்கும். தவறாக விடையளித்தால் மதிப்பெண் குறைக்கப்படாது.  

மற்றபடி எல்லோருக்கும் தெரிந்ததுதான், எப்படி மதிப்பெண்கள் கணக்கிடுவது என்பது. நாம் பொறியியலை எடுத்துக் கொள்வோம். 
கணக்கு மதிப்பெண்கள் - 100க்கு. 
இயற்பியலின் மதிப்பெண்கள் - 50க்கு, 
வேதியியலின் மதிப்பெண்கள் 50க்கு, 
கணித நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு, 
இயற்பியல் மற்றும் வேதியியல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு. 
மொத்தம் 300க்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும். 

கீழே ஒரு உதாரணம் 


அப்போது ஒவ்வொருவரும் கட் ஆப் (cut-off) மதிப்பெண்கள் இரு தசமத்தில் இருக்கும். .0.01 வித்தியாசமெல்லாம் சாதாரணம் (90 வினாக்கள், 50 மதிப்பெண்கள்தான் காரணம்). அந்த நுழைவுத் தேர்வு ஒன்றும் சிம்ம சொப்பனம் கிடையாது.

சந்தித்த பிரச்சினைகள்: 

எப்போதும் உள்ள பொதுவான பிரச்சினைகளைத்தான் சந்தித்தோம். தவறான கேள்விகள், நான்குமே தவறான விடைகள், ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் வேறு மாதிரியும் இருப்பது, கேள்வி முன்னரே வெளிவருவது, விடைகளை பென்சிலால் கருமையாக வேண்டும். சரியாக, முழுமையாக செய்யாவிட்டால் அவ்வளவுதான் என நிறைய பஞ்சாயத்துகள் நடந்தன. 

இவை பொதுவானவை. தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பெரிய பிரச்சினை எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. அப்போது பொதுத் தேர்வுகள் முடிந்து எப்படியும் 45 நாட்கள் கழித்து நுழைவுத்தேர்வு இருக்கும். அதற்காக தனி வகுப்புகள் நடக்கும். 

அந்தியூர், ராசிபுரம், திருச்செங்கோடு எல்லாம் உண்டு, உறைவிடத்தோடு வகுப்புகள் நடக்கும். பல ரகசிய வழிமுறைகள் எல்லாம் சொல்லித் தந்து "வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது" என்று சத்தியம் வாங்குவார்கள். இறுதி தேர்வில் 10 மதிப்பெண்ணிற்கு வரும் வினா இங்கே இருக்கும், அதற்காக அரை மணி நேரம் செலவு செய்ய முடியாது. அதை ஒரு நிமிடத்தில் தீர்க்கும் வழிமுறைகள் எல்லாம் அப்போதுதான் சொல்லுவார்கள். வீட்டிலேயே படிக்கும் மாணவர்களுக்கு அது மிகவும் கஷ்டம். புரிந்து படிப்பவர்களுக்கு சுலபம்.

நுழைவுத் தேர்வில் ஒரு கேள்வி தவறானாலும் 0.56 மதிப்பெண்கள் அவ்வளவுதான். தலையெழுத்தே மாறி விடும். ஆனால், முடிவில், ஒரே மாதிரி மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் குறைவு. அப்படியே இருந்தாலும், முதலில் கணிதம், பின் மற்ற பாடங்களை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். முதல் மதிப்பெண் எப்போதுமே 299.xx என்று வரும். அதுவும் ஓரிருவரே. 298.75க்கும் 299.00க்கும் நடுவில் ஒவ்வொரு 0.01 வித்தியாசத்தில் நிறைய பேர் இருப்பார்கள். 

அப்போது திருச்சியில் உள்ள REC (தற்போதைய NITயில் கூட 50 சதவீதம் சேர்த்தார்கள்). மற்ற மாநிலங்களில் உள்ள RECல் சேர அகில இந்திய அளவல் நடக்கும் தேர்வு எழுத வேண்டும். இதே நீட் போல அதற்கும் தமிழ்நாட்டில் மொத்தம் 10 மையங்கள்தான், ஆங்கில மற்றும் ஹிந்தியில்தான் எழுத முடியும் என்றெல்லாம் இருந்தது, அதனாலேயே எழுதவில்லை. 

ஆனால், CBSE மாணவர்களுக்கு "இதெல்லாம் சப்ப" என்றுதான் சொல்வார்கள். அவர்களால், பொதுத்தேர்வில் அவ்வளவு மதிப்பெண்கள் பெற முடியாது. நிறைய பேர் (என்னுடைய நண்பர்கள்) 10ம் வகுப்பு வரை CBSEல் படித்துவிட்டு, பின் மாநில பாடத்திட்டத்திற்கு மாறினார்கள். 

நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டவுடன் என்ன நடக்கிறது. 

2001க்கு பின், நாமக்கல்லில் புற்றீசல் போல நிறைய பள்ளிகள் முளைத்தன (தமிழகம் முழுவதும்தான்). நுழைவுத் தேர்வு இல்லை என்றவுடனே, எல்லா பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வதை ஊக்குவித்தன. புத்தகத்தை அப்படியே முழுங்கி, தேர்வில் போய் வாந்தி எடுக்க வேண்டியதுதான். அது மட்டுமில்லாமல் 11ம் வகுப்பில் இரண்டாம் மாதத்திலேயே 12ம் வகுப்பை ஆரம்பித்து விடுவார்கள். "கேள்வியைப் படி. 5 முறை பார்த்து எழுது. பிறகு, 10 முறை பார்க்காமல் எழுது". இதுதான் நடக்கும். இனி 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பதால், இந்த தொந்தரவு குறையலாம்.  

பொதுவாக நிறைய தவறுகள் நடப்பது ஒரு மதிப்பெண் கேள்விகளில்தான் (சரியான விடையை தேர்ந்தெடுப்பது, கோடிட்ட இடங்களை நிரப்புவது, பொருத்துக என ) மதிப்பெண்கள் இப்படித்தான் இருக்கும். எல்லா தனியார் பள்ளிகளும் எப்போதும், அவர்களுடைய பள்ளிகளே தேர்வு மையங்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். எனவே, எல்லா மாணவர்களுக்கும் இந்த 30 மதிப்பெண்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இன்று வரை இதுதான் நடக்கிறது. மற்ற 2, 5 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் அதே வாந்தி, பேதிதான்.

பொதுவாக இறுதி தேர்வுகள் பாடங்களின் முடிவில் இருக்கும் கேள்விகளையே மீண்டும் கேட்டிருப்பார்கள். அதிலும், இயற்பியலில் மின்னணுவியல் (Electronics) என்ற பாடம் உண்டு, அதிலிருந்து கேள்வியே வராது என்று எல்லோரும் சொல்வார்கள், அதை படிக்க தேவையில்லை என்று ஆசிரியரும் சொல்வார். ஒரு 10 மதிப்பெண் கேள்வி கட்டாயம் எழுத வேண்டும். அதற்கும், குறிப்பிட்ட 10 கேள்விகளே மீண்டும் மீண்டும் வரும். எனவே, நன்கு மனப்பாடம் செய்ய தெரிந்தாலே போதும் என்ற நிலைதான். 

கட் ஆப் இப்போது 200க்கு மட்டுமே. இதன் விளைவாக 200க்கு 200 மதிப்பெண்களே ஒரு 30, 40 பேர் வாங்குகிறார்கள். அடுத்தது 199.75, அதில் ஒரு 100 பேர். இவர்கள் அனைவருக்கும் கணிதம், மற்ற பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் என பார்த்து தரவரிசை அளிக்கப்படும். இவை எல்லாமே ஒரே மாதிரி இருந்தால், பிறந்த தேதியைப் பொறுத்து முன்னுரிமை. கொடுமையோ கொடுமை. 

2006க்கு முன் மருத்துவம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர்களில் அரசு பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் படித்த மாணவர்களின் சதவிகிதமும், நுழைவுத் தேர்வு நீக்கப்பட்ட பின் படிப்பவர்களின் சதவீதத்தையும் பாருங்கள், பயங்கரமாக குறைந்திருக்கும். நான் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் குறைந்தது 30 சதவீதமாவது தமிழ் வழிக்கல்வியில் படித்திருப்பார்கள். அதன் பின் படிக்க போன என்னுடைய தெரிந்த, சொந்தக்காரர்களிடம் (அவர்கள் தனியார் பள்ளி, ஆங்கில வழி கல்வி) விசாரித்தால், 10 சதவீதம் கூட தமிழ் வழி படித்தவர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் இன்னும் குறைவு. 

2001 வரை இந்த மக்கள் அதிகம் இருப்பார்கள். காரணம் கருணாநிதி 1998ல், கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தார். 2001ல் ஆட்சி மாறி ஜெயலலிதா வந்தவுடன், அதாவது மே மாதம் ஆட்சிக்கு வந்த உடனே, அதை 25 சதவிகிதமாக மாற்றினார். நான் உள்பட பல பேர் இதனால் பாதிக்கப்பட்டோம். (ஏனென்றால் 11,12ம் வகுப்பை நாமக்கல்லில் படித்தேன்), ஆனால் பல கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றனர். 

ஆனால், எதற்காக ஜெயலலிதா அதை மாற்றினாரோ அதுதான் நடந்தது. சில பேர் வழக்கு போட்டனர். நீதிமன்றம் 25 சதவிகிதத்தை நீக்கியது. மேல் முறையீடு செய்யப்படவில்லை. மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும், இது கொண்டுவரப்படவில்லை. ஏனென்றால் முக்கால்வாசி அரசியல்வாதிகள் பள்ளி, கல்லூரி முதலாளிகள் ஆகி விட்டிருந்தனர். 

சரி இனி என்ன செய்யலாம்: 

இந்தியா முழுவதும் ஒரே நுழைத்த தேர்வு என்றால், ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 
இல்லையா, அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வு நடத்தி, அந்த மாநிலத்தில் உள்ள 90 அல்லது 95 சதவிகித இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கண்டிப்பாக அரசுப்பள்ளிகளுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னர் இருந்த மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் இருந்த குழப்பங்களை களைந்து, இப்போதுள்ள சமச்சீர் பாடதிதிட்டத்தில் கீழ் உருப்படியான ஒரு நுழைவுத்தேர்வை கொண்டு வரலாம்.

மீண்டும் சொல்கிறேன். நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை. ஆனால், நீட் (NEET) சரியான தேர்வு அல்ல. 

இதற்கெல்லாம் நான் சர்வாதிகாரி ஆனால்தான் முடியும். 

7 comments:

  1. 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடந்த பொறியியல் மாணவர் சேர்க்கையில், எவ்வளவு பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள், எவ்வளவு பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்று உங்களிடம் ஏதாவது சரியான புள்ளி விவரம் உள்ளதா? இல்லாமல் இது போல தேவையில்லாமல் பதிவிட வேண்டாம். நுழைவுத் தேர்வே தேவை இல்லை என்பதுதான் நிதர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. UNNIDAM IRUKKAA ? IRUNTHAA PODU

      Delete
    2. முதல் அனா'நீ'க்கு, இது போன்ற விஷயங்களில் கண்டிப்பாக தெளிவான புள்ளி விவரம் கிடைக்காது. நீங்கள் 2006க்கு முன்பும், பின்பும் பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தவர்களிடம் விசாரியுங்கள். உங்களுக்கே புரியும். இல்லையென்றால், கல்லூரியில் இருப்பவர்களிடம் விசாரிக்கவும்.
      இரண்டாம் அண்ணா'நீங்கள்'க்கு, நன்றி. யாராக இருப்பினும் மரியாதையின்றி பேச வேண்டாமே.

      Delete
  2. முடிவில் சொன்னது நடந்தால் சந்தோசம்...

    ReplyDelete
    Replies
    1. \\இதற்கெல்லாம் நான் சர்வாதிகாரி ஆனால்தான் முடியும்.\\ கண்டிப்பாக. நன்றி.. நன்றி..

      Delete
  3. சரியான பார்வை. நீட் அனைத்து மாநிலங்களுக்கும் அணைத்து கல்வி திட்டங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருப்பது தான் இங்கு பிரச்சனை.
    நீ முன்வைக்கும் தீர்வு சரியான ஒன்றுதான்.
    //எதற்காக ஜெயலலிதா அதை மாற்றினாரோ அதுதான் நடந்தது// - நல்ல புரிதல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவா.. நீயும் பாதிக்கப்பட்டவன்தானே.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..