Thursday, March 26, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

என்னடா மறுபடியும் பிட்டு போடறானே அப்டின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒன்னும் இல்ல. கடைசி ரெண்டு பதிவுமே ரொம்ப அழுகாச்சியா போயிடுச்சு. மகளிர் தினத்துக்காக இன்னொரு பதிவு போடலாம்னுதான் பாத்தேன். ஆனா மக்கள் ரொம்பவும் கண்ணீர் சிந்தக் கூடாதேன்னு இந்த பிட்டு.

விமர்சனம்:

ராஜ தந்திரம்: மீண்டும் ஒரு திருட்டுக் கதை (கதைத் திருட்டு அல்ல). முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல, ஏமாற்றியவர்களை நாமும் ஏமாற்ற வேண்டும் என்று சொல்லும் படம். மற்றபடி கருத்தை எதிர் பார்க்காமல் சென்றாமல், உண்மையிலேயே அட்டகாசமான படம். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி பறக்கிறது.

ஆங்கிலப் படங்கள் நிறைய பார்த்திருந்தால், இந்தப் படம் உங்களுக்கு Oceans படங்களை நினைவூட்டலாம். காட்சிகள் காப்பி அடிக்கப்படவில்லை. ஆனால், படமாக்கப்பட்ட விதம் அப்படி. இந்தப் படத்துடன் நிறைய சிறிய படங்கள் வந்ததால், நேரம் கிடைக்காமல் இருந்தது. பின், சத்யமில் இரவு நேரக் காட்சி இருந்ததால் போய் பார்க்க முடிந்தது. கொடுத்த காசுக்கு திருப்தி.

அனேகன்: பொதுவாக எந்த புதுப்படமாக இருந்தாலும் முதல் வார இறுதி நாட்கள் மட்டுமே டிக்கெட் கிடைக்காது. அதன் பிறகு வார நாட்களில் எப்படியாக இருப்பினும் ஒரு டிக்கெட்டாவது கிடைக்கும். ஆனால், இந்தப் படத்திற்கு ஒரு வாரம் முழுதும் இரவுக்காட்சிக்கு டிக்கெட்டே இல்லை. நான் இணையத்தில் 'டிக்கெட் இருக்கா' என்று பார்த்து விட்டு, நேரில் போய்தான் வாங்குவேன். இரண்டு நாட்கள் சத்யம், பின் S2 எல்லாம் போயும் டிக்கெட் இல்லை. எல்லாம் 'டங்கா மாரியின்' காரணமாக கூட இருக்கலாம்.

படம் எனக்கு மிகவும் பிடித்தது. காரணம் சமீப கால படங்களில் எனக்கு மிக விரைவாக முடிந்தது போல தோன்றிய படம் இதுதான். வழக்கம் போல பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் தசாவதாரம் போல உண்மையா அல்லது கற்பனையா என்றெல்லாம் மக்கள் குழம்பட்டும் என்று நினைத்திருப்பார்கள் போல. விமர்சகர்கள் கிழித்துத் திங்க விட்டாலும், படம் நன்றாகவே இருந்தது.

காக்கி சட்டை: படம் ஆரம்பித்த உடனே ஒரு பயங்கர ஆரவாரத்தோடு பில்டப் காட்சி. அப்போதே சின்ன சந்தேகம். பிறகு அது கனவாம். 'சாரே, இது கொஞ்சம், இல்லல்ல ரொம்பவே பழைய டெக்னிக்'. இன்னும் கொஞ்சம் யோசிங்க. மற்றபடி ஒரு முறை பார்க்கலாம். சிவகார்த்திகேயனை நாம் எதற்காக நம்பி போகிறோமோ, அதை நன்றாகவே கொடுத்துள்ளார். படத்தை சீரியஸாக எடுப்பதா இல்லை காமெடியாக எடுப்பதா என்று தெரியாமல் எடுத்திருக்கிறார்கள். அது நமக்கு இன்னும் காமெடியாக இருக்கிறது. 

இப்போதெல்லாம் அடிக்கடி மூளை சாவு, உடல் உறுப்பு தானம், 20 நிமிடங்களில், போக்குவரத்தை நிறுத்தி 'இதயம்' பயணம் செய்தது என்றெல்லாம் படிக்கும்போது பொதுவாகவே எல்லோருக்கும் சில சந்தேகங்கள் வரும்.

"அது எப்படி திடீர்னு கடந்த நாலஞ்சு வருஷமா மட்டும் மூளைச்சாவு நடக்குது?"

"ஹல்லோ. இப்பதான் அது வெளியே தெரியுது. அதனால எல்லோரும் உடல் உறுப்பு தானம் செய்யறாங்க."

"சரிங்க. சந்தோஷம். ஆனா, அது எல்லாமே ஏன் பணக்கரங்களுக்கே மாத்தறாங்க. ஏழைங்களுக்கு எதுவும் மாத்த வேண்டியது இல்லையா?"

"அதுவும் செய்யறாங்க. ஆனா, வெளிய அவ்வளவா தெரியறது இல்ல"

"அப்படி நடந்தா நல்லதுதான். ஆனா, சுஜாதா அவரோட ஒரு நாவல்ல என்ன சொல்றாருன்னா?"

"இப்ப நீ போறியா, இல்ல உன் உறுப்புகளையும் தானம் செய்யவா?"

எனக்குள் ஒருவன்: எனக்கு 'லூசியா'வே அவ்வளவாக பிடிக்கவில்லை. புரியவில்லை என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதனால் இதை நான் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. 'லூசியா' பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்காது என்பது என் எண்ணம்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்: இதுவும் ஒரு நல்ல டைம் பாஸ் படம். ஒரு முறை பார்க்கலாம். நகைச்சுவையாக இருந்தாலும் 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை அட்டகாசமாக விளக்கி உள்ளார்கள். அதிலும் ஊர்வசி சொல்லும் "இந்த காலத்துப் பசங்க என்னதான் படிச்சாலும், கொஞ்சம் கூட பிராக்டிகல் அறிவே இல்ல" என்பது 110% உண்மை. இது கடந்த 15 வருடங்களுக்கு முன் படித்து முடித்தவர்களுக்குக் கூட பொருந்தும். (நானும்தான்).

மற்ற படங்கள் பார்க்கவில்லை. இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சீக்கிரம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ' ரொம்ப நல்லவன்டா நீ', 'இவனுக்கு தண்ணில கண்டம்' இரண்டு படங்களின் மூலப்படம் என்ன என்று யாராவது சொன்னால் அதை முதலில் பார்க்கலாம் என்று இருக்கிறேன். மற்றவை எதையாவது பார்த்தால், அடுத்த பிட்டில் எழுதுகிறேன்.

சில எண்ணங்கள்:

வர வர ஹாரிஸ் ஜெயராஜ் தேவா போலவே ஆகி விட்டார். எல்லா விஷயங்களிலும்தான். ஹாரிஸின் சமீப கால படங்கள் அனைத்திலுமே ஒரு பயங்கரமான கானா அல்லது குத்துப் பாட்டு வருகிறது. இந்த மாதிரி பாட்டு கேட்டார் என்றுதான் சாமி, அருள் படங்களுக்குப் பின் ஹரியை ஒதுக்கி விட்டார் என ஒரு கிசுகிசு படித்திருக்கிறேன். காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும் அல்லவா.

அதே போலத்தான் அஜித் கவுதம் மேனன் கூட. முன்பு ஒரு முறை அஜித்துடன் படம் என்று கூறி பின் அது நின்று விட, அப்போது ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தபோது, "எங்க தல கூட எப்ப படம் பண்ணுவீங்க" என்று கத்த, இவரோ "யாரு தல" என்று நக்கலாக கேட்டார். எல்லாம் நேரம்.

'என்னை அறிந்தால்' படத்தில் இளம் அஜித்தாக வரும் சிறுவனைப் பார்த்தால், எனக்கு ஹாரிஸ் ஜெயராஜின் முகம் போல தோன்றியது. ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை ஹாரிஸின் சொந்தக்காரப் பையனோ என்னவோ. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?


ரசித்தது:

ஒரே நேர்க்கோட்டில் அமையாமல் மாறி செல்லும் நான்-லீனியர் திரைக்கதையை க்வெண்டின் டாரண்டினோ, நோலன், ஷங்கர் எல்லாம்தான் நன்றாக செய்வார்கள் என்று நானும் நம்பினேன். ஆனால், இந்தப் படமும் அப்படித்தான். பாருங்களேன்.


இந்த காணொளியை கண்டு அழுதேன், துடித்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். எனக்கு அந்த தந்தையைப் பற்றிக் கூட தோன்றவில்லை. நிறைய அப்பாக்கள் இதே போல தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தை அந்த கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால், அந்த சிறு குழந்தை தன் தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை உணர்ந்துள்ளது. அதுதான் எனக்கு இதில் மிகவும் பிடித்தது. உண்மையில் இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே. நான் அதற்காக கண் கலங்கினேன்.

இதுவும் மிகப் பழையதுதான். ஆனாலும், இப்போது பார்த்தவுடன் பகிர வேண்டும் என் தோன்றியது. குறிப்பாக அந்த சிறுவனின் கற்பனைகள் மற்றும் கடைசியில் கம்பீரமாக நடப்பது. நீங்களும் ரசியுங்களேன்.


இன்னும் சில குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு காணொளிகள் உள்ளன. அவற்றின் சுட்டிகள் கீழே. பார்க்க விரும்புவர்களுக்காக மட்டும்.

தெலுங்கானா விழிப்புணர்வு காணொளி

கோமல் - தமிழ்.

வற்றைப் பார்த்தால், நாம் நம் குழந்தைகளை யாரிடமும் பழகவே விடக் கூடாது போலவே என்று தோன்றும். ஆனாலும், நடந்த பின் 'குய்யோ முய்யோ' என்று அலறக் கூடாதே. எனது மகள் ஓரளவு நடக்க, பேச ஆரம்பித்த புதிதில் சென்னையிலேயே இருந்ததால், வீட்டிலேயே இருந்து பழக்கம். எங்கள் இருவரைத் தவிர வேறு யாரிடமும் செல்ல மாட்டாள். படிப்பிற்காக மனைவி ஊரிலேயே இந்த வருடம் தங்கி இருப்பதால், மகளும் அங்கேயே. ஆனாலும் சென்னைப் பழக்கம் போகவில்லை. எங்கள் இருவரின் பெற்றோருடன் இருந்தாலும், மாலையில் அம்மா கண்டிப்பாக வேண்டும். அதே போல என்னதான் பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என்று சென்று விளையாண்டாலும், யாரும் தூக்க வந்தால் ஓடி வந்து விடுவாள், இல்லையென்றால் கத்துவாள்.

ஆனால், யாராவது மிட்டாய் கொடுத்தால் தூக்கலாம். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதையும் தவிர்க்க பழக்கி உள்ளோம். யாரவது மிட்டாய் கொடுத்தால் "அப்பா அம்மா வாங்கித் தருவாங்க, எனக்கு வேண்டாம்" என்று சொல்லப் பழக்கி உள்ளோம். அதே போல அவள் எங்களிடம் கேட்டால், "சளி பிடிக்கும்" என்றெல்லாம் ஏமாற்றாமல் வாங்கித் தருவோம். ஒரு வேளை ஜலதோஷம் பிடித்திருந்தாலும், "சரியானப்புறம் கண்டிப்பா வாங்கித் தரோம்" என்று சொல்லி விடுவோம். இது ஓரளவுக்கு வேலை செய்கிறது.

இதோ, இன்னும் இரண்டு மாதம்தான். மீண்டும் சென்னை. பள்ளி வேறு செல்ல வேண்டும். சொல்லித் தர வேண்டியது நிறைய உள்ளது. "என்ன ரைம்ஸா?, லெட்டர்ஸா?, நம்பர்ஸா?" என்று கேட்காதீர்கள். இது வேறு. சரி, மறுபடியும் கொஞ்சம் சீரியசான விஷயங்கள் வந்துடுச்சு. மன்னிச்சு. .

2 comments:

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..