Wednesday, April 29, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசி 2 பதிவுகளும் கொஞ்சம் 'சீரியஸாக' போனதால், மக்களை மகிழ்விக்க கொஞ்சம் பிட்டு. "இதுக்கு அந்த மொக்கையே பரவாயில்ல" என்று எண்ணுபவர்களை விட்டு விடலாம்.

விமர்சனம்:

கடைசியாக 'ராஜ தந்திரம்'தான் காசு கொடுத்து பார்த்தது. அதன் பின் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. படித்த விமர்சனங்களும் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என தோன்ற வைக்கவில்லை. ஆனாலும் என்னுடைய சில கருத்துகள் மட்டும்.

கொம்பன்: இந்த இயக்குனரின் முந்தைய படமான ஒண்டிப்புலி, ச்சே குட்டிபுலி அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்தப் படமும் அதே போல தென் மாவட்ட கதைக்களம் என்பதால் பார்க்க தோன்றவில்லை.

வலியவன்: நல்ல கதைதான், மொக்கை திரைக்கதை. ஆனாலும் இயக்குனரின் ஊர்ப்பாசம் ("நாமக்கல் மாமா போன் பண்ணாரு") மட்டும் ரசிக்க வைத்தது. 40 நிமிடங்களில் இந்தப் படத்தை பார்த்து முடித்து விட்டேன்.

நன்பேண்டா: தரவிறக்கம் செய்து கொஞ்ச நேரம் பார்த்ததிலேயே நிறுத்தி விட்டு, படத்தை அழித்து விட்டேன்.

ஓ காதல் கண்மணி: எனக்கு எப்போதுமே மணி மேல் நம்பிக்கை இல்லை. அவரின் எந்தப் படமும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அவரின் படங்களிலேயே நான் மிக ரசித்தது 'அஞ்சலி' மட்டும்தான். என் நண்பன் அவரின் வெறித்தனமான ரசிகன். ராவணன் படம் வந்தபோது முதல் நாள் தமிழிலும், அடுத்த நாள் ஹிந்தியிலும் என்னை இழுத்துக் கூட்டிக்கொண்டு போனான். அதன் விளைவு, நான் இன்னமும் கடல் படம் பார்க்கவில்லை. அதே போல, இது எனக்கு பிடிக்காத, காதல் பற்றிய படம் என்பதால் பார்க்க வேண்டும் என தோன்றவில்லை.

அவரது படங்களில் அவரை விட மற்ற அனைவரது வேலையையும் நன்கு வாங்கி இருப்பார். அதிலும் குறிப்பாக இசை. ராஜாவும் சரி, ரஹ்மானும் சரி மணி ரத்னத்திற்கு மட்டும் குறை வைத்ததே இல்லை. எனவே, கேட்பதோடு சரி.

காஞ்சனா 2: அதே டைலர், அதே வாடகை என்பதால், நகைச்சுவை காட்சிகளை டிவியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணம்.

ஆனால், சில மற்ற மொழிப்படங்கள் மனதைக் கவர்ந்தன. பிக்கெட் 43, NH 10, பத்லபூர், போன்றவை. இவை யாவும் ஒரு முறை பார்க்கலாம். சமீப காலங்களில், மற்ற மொழிப் படங்களில் ஏதாவது ஒரு தமிழ் பேசும் பாத்திரம் (NH 10, பத்லபூர் படங்களில் நாயகி தமிழ் பெண்ணாகவோ அல்லது தமிழ் தெரிந்த பெண்ணாகவோ) வருகிறது. 2 ஸ்டேட்ஸ் படத்தின் கதை அப்படி. பொதுவாக மலையாளப் படங்களில் தமிழ் பேசும் பாத்திரங்கள் கெட்டவர்களாகவே வரும். ஆனால், பிக்கெட் 43 படத்தில் அப்படி இல்லை. வீர மரணம் அடைந்த மதுரையை சேர்ந்த சரவணன், மேஜர் முகுந்தன் பற்றி கூட வரும்.

இது எதனால்? இந்திய அளவில் ஹிந்திப் படங்களுக்கு அடுத்து தமிழில்தான் அதிக படங்கள் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன. அதிக திறமையானவர்கள் உள்ளனர். ஆனாலும், நம்மூரில் மற்ற மொழிப் படங்கள் ஓடுவது என்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவும் கஷ்டம். எனவே, எப்படியாவது கவர வேண்டும் என்று எண்ணி இப்படி செய்கின்றனர் என நினைக்கிறேன். ஆனாலும் கஷ்டம்தான்.

அனேகமாக அடுத்து உத்தம வில்லன், மாஸ் இரண்டும் பார்த்து விட்டுத்தான் விமர்சனம். நான் ஏற்கனவே 21 படம் பார்த்து விட்டதால் வை ராஜா வை பார்க்க தோன்றவில்லை. கமலும், வெங்கட் பிரபுவும் இதுவரை எனக்கு குறை வைத்ததில்லை. (பிரியாணி சற்று ஊசிப் போயிருந்தாலும்) I'm waiting.

ஏதோ தோணுச்சு:

நடிப்பு என்றால் என்ன என்பதை யாரும் வரையறுக்க இயலாது. மூச்சு விடாமல் மூன்று பக்க வசனம் பேசுவதும் நடிப்புதான், பேச்சே இல்லாமல் பார்க்கும் ஒரு பார்வை கூட நடிப்புதான். அதே போல என்னைக் குழப்பும் இன்னொரு நகைமுரண் 'இயல்பாக நடிப்பது'. அது எப்படி இயல்பாக நடிக்க முடியும்? நன்றாக சைக்கிள் ஓட்டும் ஒருவனை சைக்கிள் ஓட்டத் தெரியாதது போல நடி என்று சொல்லும்போது, அவன் எப்படி நடித்தாலும் அது இயல்பானது இல்லை. அதுவே சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் என்றால், அதுதான் அவன் இயல்பு, அவன் நடிக்கவே இல்லை எனலாம்.

"இப்ப உனக்கு என்ன வேணும்" என்கிறீர்களா? ஒன்றுமில்லை. 'ஆடும் கூத்து' என்று ஒரு படம். நிறைய பேருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அந்தப் படத்தில், ஒரு படம் எடுப்பார்கள். ஆசிரியராக இருக்கும் பிரகாஷ்ராஜ் ஒரு கொடூரமான ஜமீன்தாராக நடிக்க வேண்டும். ஒழுங்காக நடிக்க வராது. பின் எப்படியோ சமாளித்து நடிப்பார். அந்தக் காட்சி முடிந்ததும், இயக்குனராக நடிக்கும் சேரன் கை தட்ட, உடனே, அவரது உடல் மொழி அந்த ஆசிரியராக மாறி விடும். உண்மையில், பிரகாஷ்ராஜ் மீது இருந்த மதிப்பு இன்னும் கூடியது.


என் கேள்விக்கென்ன பதில்?

ஒன்றுமில்லை. விகடனில் முன்பு வந்த 'நானே கேள்வி நானே பதில்' போல. என்ன, நமக்கு கொஞ்சம் வளவள கொழகொழ என்று நிறைய எழுதினால்தான் பிடிக்கும். எனவே, இனிதே ஆரம்பம்.

ஏன் நம் மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கிறது?


அது ஒரு ஜென்டில் மேன் விளையாட்டு. அது மட்டுமில்லாமல் நாம் அதில்தான் முதலில் உலகக் கோப்பையை வென்றோம் என்பதெல்லாம் பொய். முதலில் அது நம்மூரின் கில்லி தாண்டு விளையாட்டு போல என்பது தெரியும். அது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி விளையாடுவார்கள். எனது ஊரில் எப்படி என்றால், நாம் அந்த கில்லியை எவ்வளவு தூரம் அடிக்கிறோமோ, அங்கிருந்து நாம் விளையாடும் இடம் வரை அளக்க வேண்டும். அதே நேரம், கில்லியை நாம் காற்றில் எத்தனை முறை அடித்தோமோ, அதற்கேற்றாற்போல் அளக்க வேண்டிய பொருள் மாறும். என்னுடைய நினைவு சரி என்றால், ஒரு அடிக்கு பேட், இரண்டு அடிக்கு கில்லி, மூன்று அடிக்கு ஊக்கு, நான்கு அடிக்கு கடுகு, அதற்கு மேல், தண்ணீர், காற்று என்றெல்லாம் இருக்கும். எனவே, பொதுவாக தூரமாக அடிப்பதற்கு பதில் கில்லியை காற்றிலே நிறைய முறை அடிக்க பார்ப்போம்.

சரி விடுங்க. நாம நம்ம விஷயத்திற்கு வருவோம். நம் மக்களுக்கு பொதுவாக பேராசை அதிகம். விரைவாக பணம் சேர்க்க வேண்டும், கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும், மற்றவர்கள் வேலை செய்ய, நாம் சுகமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவார்கள். "சரி அதுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்" என்கிறீர்களா? பொதுவாக கால் பந்து, கைப்பந்து, ஹாக்கி எனக் குழும விளையாட்டில் அனைவருமே ஆட்டம் முழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கவனம் முழுதும் பந்தின் மீதும், எதிராளிகள் மீதும் இருக்க வேண்டும். ஒரு ஆள், ஓரிடத்தில் தவறி பந்தை விட்டால் அது எதிராளியிடம் சென்று விட்டால், திரும்ப அனைவருமே முயற்சி செய்துதான் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும்.

ஆனால், கிரிக்கெட்டில் அப்படி இல்லை. எந்த நேரத்திலும் பந்து போடுபவர், அடிப்பவர் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதன் பின் பந்து எந்த திசையில் போகிறதோ, அங்குள்ள ஓரிருவர் மட்டும் கவனமாக இருந்தால் போதும். எனவே, மூன்று மணி நேர ஆட்டத்தில், ஒரு வீரர் பாதி நேரம் ஓடினாலே மிக அதிகம்.

அடுத்து, மட்டையாளர்கள். ஓடவே தேவை இல்லை. நின்ற இடத்தில் இருந்தே 4, 6 என எடுக்க முடியும். அதே போல ஒரு நேரத்தில் இரண்டு பேருக்குத்தான் வேலை. இன்னும் குறிப்பாக சொன்னால், ஒருவருக்குத்தான் வேலை. அதே போல, அணியில் உள்ள 11 பேரும் மட்டையை பிடிக்க வேண்டிய தேவையும் இல்லை. பந்து வீசுபவர் தவறு செய்தாலும், நமக்கு ரன். இன்னும் குறிப்பாக சொன்னால், ஒரு ஆள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து பந்து வீசும்போது, அப்படியே சும்மா பேட்டை தூக்கி பந்தை தவற விட்டு அவனைக் கடுப்பேத்துவது என்பது 'என்ன சுகம்'.

மற்ற விளையாட்டுகளில், கோல், புள்ளிகள் என எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் 100க்குள் அடங்கி விடும். ஆனால், கிரிக்கெட்டில் குறைந்த பட்சம் 200க்கு மேல் போகலாம். அது மனதளவில் நமக்கு 'அதிகம்' என்ற மனப்பாங்கைக் கொடுக்கும். அதே போல மற்ற விளையாட்டுகள் அனைத்தும் கண்டிப்பாக அந்த குறிப்பிட்ட நேரம் விளையாண்டே ஆக வேண்டும். கிரிக்கெட்டில் அதுவும் தேவை இல்லை. இதே போல தடகளம் போன்றவையாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடும் டென்னிஸ் போன்றவையாக இருந்தாலும், அது குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே விளையாட முடியும். அதுவும் அவரின் திறமையைப் பொறுத்துதான் எல்லாம்.

கடைசியாக சொல்வது ஒன்றுதான். 'நோகாமல் நோம்பி கும்பிடுவது' கிரிக்கெட்டில் சுலபம். அதனால்தான் நம் மக்களுக்கு இதன் மேல் ஈர்ப்பு வந்திருக்கும்.

அவ்வளவுதாங்க.

6 comments:

  1. சுவாரஸ்யமான விருப்பங்களுடன் ஆரம்பம் இனிதே...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாக்கிற்கும் மிக்க நன்றி. சும்மா நமக்கு தோன்றத எழுதத்தானே பதிவு.

      Delete
  2. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
  3. I like that observation 'நோகாம நோம்பி கும்புடறது'.
    கோயமுத்தூர்????!!!!

    நல்ல பகிர்வு.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா..

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..