Tuesday, December 26, 2017

குக்கரன்! 'தில்'கரண்!!

ரொம்ப நாளாக திரைப்படங்கள் பற்றி பதிவே போடவில்லையே. வருட கடைசியில் ஒன்று போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் என் எண்ணத்தை மாற்றி விட்டன. இது போன்ற பரபர, விறுவிறு காட்சிகள் எல்லாம், இப்போது படங்களில் கூட வருவதில்லை. யார் நாயகன், யார் கெட்டவன், யார் குணச்சித்திரம் என்று நாம் எண்ணுகிறோமோ, அப்படியே எதிர்மறையாக மாறுகின்றன. இன்றைய முடிவுக்கு குறித்து எனது சில கருத்துக்கள். 

பணநாயகம் வென்றது. இது உண்மைதான் என்றாலும், இது மட்டுமே உண்மை கிடையாது. எனது நிறுவனத்தில் உள்ள ஒருவர், அதே தொகுதியில் இருப்பவர். அவர் சொன்னது, திமுக பணம் கொடுக்கவில்லை, அதிமுக 6000 கொடுத்தார்கள், ஓர் ஓட்டிற்கு. தினகரன் அணியோ, முதலில் ஒரு குக்கர், பின் அந்த 20 ருபாய் நோட்டு. 

வென்றால், ஓர் ஓட்டிற்கு 10000 ருபாய், உறுதியாக. இதுதான் அவர்களது வாக்கு. சரி பணத்திற்காக வாக்களித்தீர்களா என்ற கேள்விக்கு அவரது பதில், "அதில் என்ன தவறு?, அது மட்டுமின்றி, நாங்கள் ஏன் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், ஏதாவது ஒரு காரணம் நீங்களே சொல்லுங்கள்" என்றார். உண்மைதான். இவ்வளவு நாள் அவர்கள் இருவரும்தான் மாறி மாறி இருந்துள்ளனர், என்ன ஆயிற்று. ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 

எவனாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் திருடத்தான் போகிறான். அதில் எங்களுக்கு யார் நிறைய பங்கு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கிறேன் என்பதுதான் அவரது கூற்று. ஆனால், அது மட்டுமே 50 சதவிகித வாக்கு தினகரனுக்கு கிடைக்க காரணமா என்றால், கண்டிப்பாக இல்லை.

முதலில் இருந்தே பார்ப்போமே, ஜெயலலிதா இறந்தவுடன், சசிகலா எதுவுமே வேண்டாம் என்பது போல நடிக்க, மற்ற அடிமைகள் எங்களை காக்க வைக்க தெய்வமே நீங்கள்தான் என்பது போல கதறி அழ, உங்களுக்காக எனது வாழ்க்கையை நான் அர்ப்பணிக்கிறேன் என சசி அழ, பொதுக்குழுவில் சசி தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நிமிடம் பிரம்மாண்டமான போஸ்டர் அடுத்த நொடியே மாறியதை யார் பார்த்திருந்தாலும் "என்னா நடிப்புடா சாமி" என்று கண்டிப்பாக தோன்றியிருக்கும்.

எனக்கு 'காஸநோவா' கதைதான் நினைவுக்கு வந்தது.

ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள், சசி உள்ளே போக, அதற்குள் தினகரனை உள்ளே நுழைக்க, பன்னீர் தியானம் செய்ய, ஒரு நாளில் பன்னீர் காமெடியனாக இருந்து நாயகன் ஆனார். அப்போது அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், தினகரனும் உடனே உள்ளே நுழைய ஆசைப்பட, "இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும் யுவர் ஹானர், இவங்க கண்டிப்பா ஜெயலலிதாவை கொன்னுருப்பாங்க" என எனக்கு நானே நீதிபதிகள் தீர்ப்பு எழுதி விட்டனர். அதற்குள் தேர்தலையே நிறுத்தி விட்டனர். அதற்குள் தர்மயுத்தம் நாடகம் முடிந்து எடப்பாடியும், பன்னீரும் சேர்ந்து விட தினகரன் தனித்து விடப்பட்டார். நிற்க.

நிறைய படங்களில் நாயகன் திருடனாக இருப்பார். அடுத்தவர்களிடம் திருடுவார், கொள்ளை அடிப்பார். அவர் ஏதாவது பிரச்சினையில் சிக்குவார். உடனே நமக்கு என்ன தோன்றும். "ஐயோ பாவமே, அவன் எப்படியாவது தப்பிக்கணுமே" என்றுதான் தோன்றும். அதே போலத்தான், "எடப்பாடி, பன்னீரை எல்லாம் பெரிய ஆளாக்குனது ஜெயலலிதா இல்ல, சசிகலா போல, அவங்களுக்கு போய் துரோகம் பண்ணிட்டாங்களே" என்று முதலில் பரிதாபம் முதலில் வந்தது. "ஒரு வேளை, இவங்கதான் ஜெயலிதாவை கொன்னுருப்பங்களோ" என்ற சந்தேகத்தையும் முதல் நாள் வெளியிட்ட காணொளியில் நிவர்த்தி செய்து விட்டார்கள். முடிந்தது. 

அதை விட முக்கியமான இன்னொரு விஷயம். பேச்சுத்திறன். ஜெயலலிதா ஏன் எந்த மங்குனி அமைச்சர்களையும் பேச விடாமல் வைத்திருந்தார் என்று எல்லா அமைச்சர்களும் நிரூபித்து வருகின்றனர். ஆனால், தினகரனோ எந்த கேள்விகளையும் தவிர்த்ததில்லை, மங்குணித்தனமாக பதிலளிக்கவில்லை. அதிலும் பாண்டேவை திணறடித்ததெல்லாம் தனிக்கதை. அது ஒரு தனித்துவமான திறன். ஜெயலலிதாவுக்கு கூட அந்த திறன் இல்லை. 

இந்த வருட அரசியல் நிகழ்வுகளினால் அறியப்படும் நீதி. 

1. எதிலும் அவசரப்படக்கூடாது. (சசிகலா பொது செயலாளர் ஆனது). 
2. பரிதாபத்தை உருவாக்கக் கூடாது, உருவாக வேண்டும். (பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் மூலம் உருவாக்கினார். ஆனால், தினகரனுக்கு பன்னீரும், எடப்பாடியும் செய்த வேலையால் பரிதாபம் உருவானது.) 
3. மக்கள் முட்டாள் அல்ல. மக்களுக்கு தெரிந்தது இரட்டை இலையும், உதயசூரியனும்தான் என்ற எண்ணம். (இரட்டை இலை இரண்டாக பிரிந்ததால், நமக்கு வாக்கு வரும், 2G விடுதலை என அளவுக்கதிமான தலைக்கனத்தில் திமுக அழிந்தது.) 
4. வாய்மை. இது நேர்மையை குறிப்பிடவில்லை. மற்றவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது. 
5. அடுத்தது என்ன செய்வோம். ஒவ்வொருவரும், அடுத்தவரை குற்றம் சொல்லியே வாக்கு கேட்டனர். தினகரன் உட்பட. திமுக, அதிமுக இதுவரை உருப்படியாக அந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. தினகரனோ, குறைந்தது அடுத்து ஆட்சியை (?) பிடிக்கவாவது ஏதாவது நல்லது செய்வார் என்ற நப்பாசையும் மக்களுக்கு இருந்திருக்கலாம். 

எது எப்படியோ, இது அனைவருக்கும் ஒரு பாடம். பார்ப்போம். இதே போல தமிழ் ஹிந்துவில் இரண்டு கட்டுரைகள் வந்துள்ளன. உங்களுக்காக. 

ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?

ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி..! - இது தினகரன் ஸ்டைல்?

2 comments:

  1. ஒரு சில கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும், 'பரிதாபம், பணம்' இரண்டிலும் உடன்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வேறுபாடான கருத்துக்களையும் தெரிவித்திருக்கலாம்! வருகைக்கு நன்றி.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..