Monday, November 13, 2017

பதிவுலகில் பத்து வருடங்கள்!!

இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகி விட்டது. 120 மாதங்கள், 120 பதிவுகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டாக ஆரம்பித்தது, இன்னும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று வருவோம்.

2005லேயே தமிழ் பதிவுகள் பிரபலமாக ஆரம்பித்து விட்டாலும், இணையம் சென்றால் படம் தரவிறக்கம், இளையராஜாவின் யாஹூ குழுமம், செய்திகள் என்றே என் பிழைப்பு ஓடியது. அதிலும், ரஹ்மானின் யாஹூ குழுமம் மற்றும் மற்ற குழுமம்(Forum)களில் ராஜா மற்றும் ரஹ்மானின் சண்டைகள் பற்றி படிப்பேன்.

இந்த நிலையில்தான் குமுதம், ஆனந்த விகடனில் தமிழ் பதிவுகள் பற்றி எழுத ஆரம்பித்தனர். முதல் வாரமே இட்லிவடை பற்றிதான். அதன் பிறகு கேபிள்சங்கர் என நிறைய பேர் பற்றி வாராவாரம் வர ஆரம்பிக்கவும், அது என்னடா பதிவர் என்று தேட ஆரம்பித்தால், ஒரு முறை மிக தெளிவாக பதிவு என்றால் என்ன, அப்படி என செய்முறை விளக்கம் எல்லாம் போட்டிருந்தார்கள். நமக்குத்தான் கூகுளாண்டவர் அருள் ஏற்கனவே இருந்ததால், உடனே பதிவு ஆரம்பித்தாகி விட்டது. ஆனால், பெயர் வைக்கவே ஒரு மாதம் ஆகி விட்டது.

முதலில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. சும்மா, இளையராஜா, கமல் என ஜல்லி அடித்துவிட்டு, மீண்டும் ஆறு மாதம் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. அதன் பின் ஆரம்பித்தது, அவ்வப்போது 3 மாதம், 4 மாதம் என இடைவெளி விழுந்தாலும், பின் எழுந்து சென்று கொண்டே உள்ளேன். நமக்கு கணக்கு பிடிக்கும் என்பதால், ஒரு சில புள்ளி விவரங்கள் அங்கங்கே வரும்.

ஏற்கனவே வேலை பற்றிய பதிவில் சொன்னது போல எனது இரண்டாவது நிறுவனத்தில் (2008-2011) செய்த சித்ரவதையால் அந்த வருடங்களில் பதிவுகள் குறைந்து விட்டன. அதன் பின் அவ்வப்போது வெளிநாட்டுப் பயணங்கள் போகும்போதெல்லாம், நிறைய பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டேன். அதனால்தான் முதல் 5 வருடங்களில் 50 பதிவுகள் என்பது அடுத்த 5 வருடங்களில் 70ஆக அதிகரித்துள்ளது. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், எப்படி சிலர் ஒரு மாதத்திற்கே 50 பதிவுகள் எழுதுகின்றனர் என்பதுதான்.

நான் பதிவு எழுத ஆரம்பித்த உடன், என் நண்பர்கள் சிலரும் பதிவு எழுத ஆரம்பித்தனர். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்தி விட்டனர். அப்போது பிரபலமாக இருந்த பாதிக்கு மேலான பதிவர்கள், இப்போது பதிவே எழுதுவதில்லை, அப்படியே எழுதினாலும் மிகக் குறைவு. இனி ஒரு சில மலரும் நினைவுகள்.

லிங்குசாமி: என்னுடைய பதிவுலக வரலாற்றில், இரண்டு பதிவுகள் மிக அதிகமாக படிக்கப்பட்டன. அஞ்சான், உத்தம வில்லன். இரண்டுக்குமே காரணம் லிங்குசாமி. அப்போது பாதிக்கப்பட்டவரை இன்று வரை மீட்க இயலவில்லை. சண்டைக்கோழி 2ல் கண்டிப்பாக மீது வர வாழ்த்துக்கள்.

என் அத்தை: எனது தந்தையின் தங்கை பற்றிய எனது பதிவு திடீரென நிறைய பேர் படிக்கும் பதிவாக உள்ளது. என் அத்தை என்றவுடன் ஏதாவது கில்மா பதிவு என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை. பகுதி 1, பகுதி 2 என இரண்டு இருந்தாலும், முதல் பகுதி மட்டும் அதிகம் படிக்கப்படுகிறது.

புகழ்: ஆரம்ப காலங்களில் நமது பதிவுகள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமெனில் மற்றவர்களின் பதிவுகளுக்கு போய், பின்னூட்டங்கள் இட்டு, பின் எனது பதிவிற்கும் வாருங்களேன் என்று அழைப்பு விடுக்க வேண்டும். அதை செய்தாலும், பின் ஏதோ ஒரு மாதிரி இருந்ததால், அதன் பிறகு அதை விட்டு விட்டேன். சில பதிவர்கள், தாங்கள் ரசித்த புது பதிவர்கள் என்று அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலம் இன்னும் கொஞ்சம். ஒரு கட்டத்தில் யார் படித்தால் என்ன, நாம் பாட்டுக்கு எழுதுவோம் என்று எழுதிக்கொண்டிருந்தேன்.

திடீரென யாராவது இளையராஜா பற்றியோ, கமல் பற்றியோ கேவலமாக ஒரு பதிவு போட்டால், உடனே அதை எதிர்த்து ஒரு பதிவு போட்டால்தான் மனது அடைக்கும். அந்தப் பதிவில் ஏதாவது கருத்துக்கள் இட்டு, அது வேறு பஞ்சாயத்து ஆகி, அது தனிக்கதை. இருந்தாலும், வயது ஆகிறது அல்லவா. இப்போது கொஞ்சம், கொஞ்சம்தான் பக்குவம் வந்துள்ளது. அது போல ஏதாவது பதிவு படித்தால், முதலில் சிரிப்பு வரும். பின், அதைத் தவிர வேறு எதையாவது நினைக்க ஆரம்பித்தால், அது மறந்து விடும். பின் ஆற அமர ஏதாவது பதிவு எழுதுவேன்.

அதன் பிறகு திடீரென தமிழ் ஹிந்துவில் எனது பதிவு பற்றி வந்தது. என் வாழ்க்கையிலேயே மிகவும் பெருமையா தருணம் அது. நமது படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம், அந்த போதையே தனி சுகம். இது போல அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுகளே இன்னும் என்னை எழுத வைக்கிறது.

சில நல்ல பதிவுகள்:

இந்தியாவின் சாலை விதிகள்

நாமக்கல் கல்விப் பண்ணைகள்

தவறுக்குக் காரணம் பெற்றோர்களே!! மாணவர்களே!!

சென்னையின் வாகன ஓட்டிகள்

திரைப்படங்கள்/திரையிசை பதிவுகளில் சில நல்ல பதிவுகள்:

நான் ரீமேக் செய்ய விரும்பும் படங்கள்!!! 

ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!

விஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்


தங்களின் ஆதரவிற்கு நன்றி!!

6 comments:

  1. பத்து ஆண்டுகள் கடந்து விட்டமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே.
    -கில்லர்ஜி

    ReplyDelete
  2. வாழ்த்துகள் நண்பரே.. அப்படியே உங்கள் ப்ழைய வலையுலக நண்பர்களையும் இழுத்து வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அவர்களே! இனி மிகவும் கஷ்டம். அவர்கள் படிப்பதே பெரிது.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..