Sunday, June 30, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

முந்தைய பதிவு கொஞ்சம் சோகமாகவும், சமுதாய நோக்கத்தோடும் (?) இருந்ததால், இந்த முறை ஜாலிலோ ஜிம்கானா பதிவு. 

தண்ணீர் தண்ணீர்:

தண்ணீர் பிரச்சினை மிக கொடூரணமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு காலையில் 4 மணி நேரம், மாலையில் 4 நேரம் இன்றி இருத்தது, காலையில் மட்டும் என்று மாறியது. பிறகு 2 மணி நேரமானது. தற்போது ஒரு மணி நேரமாக உள்ளது. 

கொடுமை என்னவென்றால், அந்த ஒரு மணி நேரத்திலும் கிட்டத்தட்ட 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை அளக்கும் மீட்டர் பொறுத்தி விட்டோம். இனி சற்றே குறையும் என்று எதிர் பார்க்கிறோம். 

படித்தவர்கள், பண்பானவர்கள், அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் நடந்து கொள்பவர்கள், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள்தான் இது போன்ற அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பார்கள் என்று நினைத்தால், தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எவன் எப்படிப்போனால் எனக்கென்ன, எனக்கு வேண்டியது நடந்தால் போதும் என்பவர்கள்தான் நிறைய. இப்படிப்பட்ட தண்ணீர் பஞ்சத்திலும், "நாந்தான் காசு கொடுக்கிறேன்ல, எனக்கு ஏன் தண்ணி தர மாட்டேன்னு சொல்ற" என்று சண்டை போடும் ஆட்கள்தான் நிறைய உள்ளனர்.  

அஞ்சலி:

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்த பிறகு, அடிக்கடி நான் எழுத நினைத்த திரைப்படம் அஞ்சலி. அந்தப் படம் பார்க்கும் போது 8 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். 

மூக்கு ஒழுக, அரைஞாண் கயிற்றால் இடுப்பில் டிராயர் விழாமல் பிடித்துக் கொண்டு, காலில் செருப்பு கூட போடாமல் சுற்றும்போது, நம்மைப் போன்ற ஒரு பையன் ஜீன்ஸ், டீ சர்ட், ஷூ போட்டுக்கொண்டு, நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே போய், போட்டுக்கொண்டு மொட்டை மாடி மொட்டை மாடி, இரவு நிலவு என்று பாட்டு பாடியதைப் பார்க்கும்போது, வாயைப்பிளந்து கொண்டு பார்த்தேன். நாமும் அதே போல சுற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு, வீட்டில் போய் அந்தப் படத்தில் வருவது எல்லாம் வேண்டும் என்று கேட்டு, அடி வாங்கியதுதான் மிச்சம். 

அதன் பிறகு, 10ஆவது படிக்கும் பொது என் அத்தை வீட்டிற்காக முதல் முறை சென்னை வந்தேன். அதுவும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பே. ஆனால், அங்கு பக்கத்துக்கு வீட்டில் யாரென்று தெரியாது, பார்த்தால் சிரிப்பார்கள், அங்கேயெல்லாம் போகக்கூடாது, சிறுவர்கள் இருந்தாலும், வெளியே வந்தால்தான் விளையாட வேண்டும் என்றெல்லாம் சொன்னவுடன், அடப்போங்கப்பா என்றாகி விட்டது. இப்போது நானும் அதே குட்டையில் ஊறிக்கொண்டிருக்கிறேன்.

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்: 

எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் நல சங்கத்தில், முக்கிய உறுப்பினர்கள் எல்லோருமே ஓய்வு பெற்ற ஆட்கள். அவர்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்பார்கள், நான் ஏற்கனவே நான்கைந்து இடங்களில் இதே போல இருந்திருக்கிறேன், நிறைய செய்திருக்கிறேன் என்பார்கள். ஐயா, இப்போதைக்கு, இங்கே என்ன தேவை என்று பாருங்கள், அதற்கேற்றாற்போல செய்யுங்கள் என்றால், உடனே கோபப்படுவார்கள். 

அதே போலத்தான் இப்போது இளையராஜாவும். அவர் நிறைய செய்திருக்கிறார். ஆனால், இப்போதைய மக்களின் மன நிலை என்ன, அவர்களின் தேவை என்ன என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. தான் என்ன கொடுக்கிறோமோ அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். என்னத்த சொல்ல. 

இதில் கொடுமை என்னவென்றால், இளையராஜாவை விமர்சிக்கும் (ஆதரித்தோ, எதிர்த்தோ) முக்கால்வாசிப் பேர், அவரது பாடல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து கேட்பவர்கள். இதில் நானும் அடக்கம். 


இளையராஜாவின் பாடல்கள் என்பது ஒரு பொருள். நமக்கு பொருள் பிடிக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். ஆனால், நாம் அதை தயாரிப்பவரை ஏன் விமர்சிக்கிறோம் என்று புரியவில்லை. இது எப்போதும் திரைத்துறையில் மட்டுமே நடக்கிறது. என்னவோ போடா மாதவா. 

"ஏண்டா இதையா ஜாலியாத பதிவுன்னு சொன்ன" என்று சண்டை போட வேண்டாம், ஏதோ புலம்ப வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான். 


No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..