Sunday, June 16, 2019

தமிழகம் - பாலைவனம்

மூன்றரை வருடங்களுக்கு முன்பு, தமிழகம் - மழையகம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதற்குள், இப்படி ஒரு பதிவு இட வேண்டி வரும் என்று எதிர் பார்க்கவே இல்லை. 

ஒவ்வொரு வருடமும் எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில் பிப்ரவரி முதல் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை தண்ணீர் விலை கொடுத்து வாங்குவோம். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் வரை வரை தேவைப்படும். கிட்டத்தட்ட 11 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதில் இரண்டு மட்டுமே உயிருடன் உள்ளன. மழைக்காலங்களில் இன்னும் நான்கைந்து கிணறுகள் ஆதரிக்கும். 

ஒரு நான்கு மாதங்கள் வெளியில் தண்ணீர் வாங்காமல் சமாளிப்போம். கடந்த வருடங்களில் 80 ஆயிரம் லிட்டர் வரை வாங்குவோம். ஆனால், இந்த வருடம் முழுக்க முழுக்க வெளியே வாங்குகிறோம். ஏன் இப்படி என்று யோசித்தால், குடியிருப்பில் மழை நீர் சேகரிப்பு செய்திருக்கிறோம். கழிவறைகளுக்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறோம். 

இருந்தாலும் ஏன்? 2011ல் இருந்து, இந்த ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எங்களது குடியிருப்பு உட்பட மொத்தமாக (எனக்கு தெரிந்து மட்டும்) குறைந்தது 500 வீடுகள் அதிகரித்திருக்கின்றன. எல்லா அடுக்கு மாடி குடியிருப்புகளும் இதே போல செய்கின்றனவா என்று தெரியாது. அவ்வளவு ஏன், எங்களது குடியிருப்பில் நிறைய பேர் தேவையின்றி தண்ணீரை செலவு செய்வார்கள். கேட்டால், "அதான் காசு கொடுக்குறேன்ல" என்பார்கள். மொத்தமாக எடுத்துக்கொண்டால், 2010ல் இருந்து வீடுகளும் மக்கள் தொகையும் இரு மடங்கு அல்லது மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் தண்ணீரின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

சரி. இனி என்ன செய்யப் போகிறோம். நம் மக்கள் எதை தோலை நோக்கு பார்வையில் பார்க்க வேண்டும், எதை குறுகிய கால கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதே தெரியாது. 25 வருடங்கள் கழித்து வருவதற்காக ஆயுள் காப்பீடு எடுப்பார்கள், ஆனால், சிக்னலில் 5 நொடிகள் காத்திருக்க மாட்டார்கள். 

அதே போல இப்போது நாம் செய்யும் பல விஷயங்கள் பிற்காலத்தில் நமக்கு பயன்படும் என்றால், "இப்பத்தான் காசு கொடுத்தா தண்ணி கிடைக்குது. மழ வந்தா தானா தண்ணி வரப்போகுது. இப்ப பாத்தீங்கன்னா ஒரு வருஷம் பஞ்சம் வந்துச்சுன்னா அடுத்த வாட்டி மழை நல்லா வரும். நீங்க வேணும்னா பாருங்களேன். இந்த வருஷம் மழை எப்படி பிச்சு எடுக்கும் பாருங்களேன்." என்பார்கள். சரி, மழை வந்தால், மீண்டும் பஞ்சம் வருமே, அதற்கு என்ன செய்வது என்றால், அது நம்ம விதி என்பார்கள். 

தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேச ஆரம்பித்தால், ஒவ்வொருவரும் தங்களுக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்று காண்பிப்பதற்காக அந்த ஊரில் அப்படி, இந்த ஊரில் இப்படி தண்ணீரை சேமிக்கிறார்கள் என்று வருவார்கள். இந்த வளாகத்தில் அதற்காக வசதி இருக்கிறதா, இதற்கு முன் ஏதாவது செய்திருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. மீறி சொன்னால், என் யோசனையை ஏற்பதில்லை என்று பிரச்சினை. அதை தனியாக பார்ப்போம். 

இன்னொன்றும் சொல்கிறேன். பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையில்தான் 2015ல் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தது. ஈச்சங்காடு சந்திப்பில் இருவர் இறந்தும் விட்டனர். ஆனால், இப்போது அந்த சாலையில்தான் அதிகளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஓரளவு ஏரிகளையும், சாக்கடைகளையும் தூர் வாரியுள்ளார்கள். ஆனாலும் மழை வந்தால் தாங்குமா என்று தெரியவில்லை. 

சரி, அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்லப் போகிறோம் என்றே தெரியவில்லை. நான்கு வீடு, கொஞ்சம் நிலம், நிறைய நகை, வங்கிக் கணக்கில் பணம் என்று மட்டுமே இருக்கும். ஏதோ நான் கூட சிறு வயதில் ஓரிரு மரங்களை நட்டுள்ளேன். அப்போது என்ன செய்வோம் என்றால், ஆளுக்கு கொஞ்சம் புளியங்கொட்டை, வேப்பங்கொட்டை, மாங்ககொட்டை என்று எல்லாவற்றையும் ஓரிடத்தில் புதைத்து தினமும் தண்ணீர் ஊற்றுவோம். யாருடைய விதை சீக்கிரம் முளைக்கிறது, வேகமாக வளர்கிறது என்று பார்ப்போம். அதில் பாதிக்கு மேற்பட்டவை இப்போது இல்லை என்றாலும், இன்னும் பல மரங்கள் உள்ளன. 

என் மகள் பிறந்த போது, என்னுடைய தாத்தா வீட்டில் மூன்று தென்னை மரங்களை நட்டார். இப்போது அதிலிருந்து எங்களுக்கு தேங்காயும், நிழலும் கிடைக்கிறது. என் மகள் எப்போது ஊருக்குப் போனாலும், அதற்கு அவள்தான் தண்ணீர் ஊற்றுவாள். சென்னையிலோ, மரங்களை வெட்டி விட்டு, வீடுகளை கட்டுகிறார்கள். நான் உட்பட எல்லோரும் அங்கேயே வீடு வாங்கி, குடியேறி, தண்ணீர் இல்லை, வெயில் அதிகம் என்று புலம்புகிறோம். மரங்களை வெட்டி, சாலைகளை அகலமாக்கி சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன சாதிக்கிறோம்? 

நாமக்கல்லில் இருந்து கரூர், சேலம் சாலைகளில் முன்பெல்லாம் புளியமரமாக இருக்கும். அதை ஏலத்திற்கு விட்டு புளிகளை உலுக்கி, அதை பொறுக்குவதற்கென்றே போவோம். அப்பொடுகு இரு வழி சாலையாக இருந்தது. இப்போது, எல்லா மரங்களும் வெட்டப்பட்டு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு விட்டன. எந்த மரங்களும் புதிதாக நடப்படவில்லை. இப்போது வெயில் அதிகம் என்று புலம்புகிறார்கள். 

நாம் கேரளாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எல்லோரும் வாய் கிழிய பேசுவார்களே தவிர எல்லோருக்கும் அன்றைய பொழுது பிரச்சினை இன்றி போனால் போதும், அப்போதைக்கு ஏதாவது தேறினால் போதும் என்று உள்ளார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மழை வரும். பிறகு ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்க போய் விடுவார்கள். நானும் அடுத்து சினிமா பிட்டு என்று பதிவுகள் போடுவேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் இதே போல ஒரு பதிவு போடுவேன். அவ்ளோதான். போங்க போங்க. 

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..